
கதைகளுக்கெல்லாம்
ஒரு தாய் கதை உண்டு
உலகில்
அதுவே ஆதாம் கதை!
பழத்தினில் கேடு
வருவது உண்டு;
பழமே கேடாய்
வந்த கதை அது!
"ஆதாம்!
அனைத்தையும் எடு;
அக்கனியை
மட்டும் விடு"
கடவுள் சொன்னார்
அக்கனி...
பொற்கனி போன்றதொரு
அக்னி!
அம்மரதருகே
கரியதொரு பாம்பு!
அடிக்கடி
அம்மரத்தை சுற்றும்...
ஒரு நாள்...அவன்
மனத்தை சுற்றியது.
பிறகு
புத்தகம் போல்
அம்மரத்தைப்
பிரித்தது... பாம்பு!
ஆதாமை கேட்டது
"தப்பேது கண்டாய்...
தித்திப்பான இப்பழத்தில்"
"கூடாதேமே....
கடவுள் சொன்னார்"
கூடாதென்றால்
படைத்தது ஏன்?
கேட்டிட மாட்டாய்...
அறிவிலியே"?
இலைகளின் அசைவில்
கிளைகளின் ஆட்டத்தில்
பிழையாய் பார்த்தபடி
நெளிந்தது பாம்பு!
"வனத்தின் பழங்களை
உண்பவனே! - இது
வானத்தின் பழம்!
இன்னும் கேள்...
ஞானத்தின் பழம்!
இது கடவுள் ஆக்கிய
பழமோ?
அல்ல...அல்ல..
உன்பவரைக்
கடவுள் ஆக்கும் பழம்
அறிவாயோ?
ஆதலின்
இப்பழ்தை உண்டிடு...
உண்டபின்
வானத்தின் கூரை
மீது நின்றிடு..
நீயொரு கடவுள்"
சிரித்தது பாம்பு.
ஆதாம் பார்த்தான்
அவன் கண்களில்
அக்கனி ஆடியது
ஏவாள் பார்த்தாள்..
அக்கனியே..அவள்
கண்களாய் மாறியது.
பறித்தார்கள்...
சிவந்த பழம் அது...
கடித்தார்கள்....
உதடுகளில் வழிந்தது
கருப்பு நிறசசாறு!
பூமியே புரண்டது
இடிகள் தாவின...
தரையில் உருண்டன
சூறைக் காற்றில்
ஏதேன் வளைந்தது!
மின்னல்கள் தெறித்தன
மேனியில் சில
சன்னல்கள் திறந்தன..
பிறந்த மேனி
அன்று
திறந்த மேனியாய்...
அடடா!
கண்கள் கூசிற்று!
"ஏய்...நிர்வாணி!"
அறிவு வாய் திறந்தது
ஓடினார்கள்...
ஓடி...ஓடி
இழைத்த பொழுதில
இரவு விழுந்தது
விடியலில்
தந்திர பாம்பு...
மந்திர பழம்...
சுந்தர வனம்...என
தூரத்தே ஏதேன்!
வெட்டவெளியில்
பூமியின்
வெறுமையை தொலைத்தபடி
இருவர்....
ஆதாம்...ஏவாள்!
ஆதாம் கதையது
பழத்தின் கதையல்ல;
பழம் போல்..பாவம்
பழுத்திட்ட கதை.
